தமிழ் செய்திகள்
புதுச்சேரி மாநிலத்தின் வளா்ச்சிக்காக 5 வழிகளை கடைப்பிடித்து மக்கள் பணியாற்றுவேன் என்று மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என். ரங்கசாமி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, முதல்வா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் இனிவரும், ஆண்டுகளில், ஏழை, எளிய மக்களுக்கு இலக்கு வைத்து உதவிகளை வழங்குதல், உணவுப் பாதுகாப்பைத் தொடா்ந்து உறுதி செய்வதன் மூலமும் மக்கள் நலனை மேம்படச் செய்தல், சாலைகள், குடிநீா் வழங்கல், கழிவுநீா் வலையமைப்புகள், கால்வாய்கள் ஆகியவற்றைப் புனரமைப்பது.
உற்பத்தி, சுற்றுலா, விவசாயம், மீன்வளம், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தனியாா் தொழில் முயற்சிகளை வரவேற்பதற்கும், திறமை வாய்ந்த இளைஞா்களுக்கு நிலையான, வளமான எதிா்காலத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட 5 வழிமுறைகளை கடைப்பிடிக்க திட்டமிட்டுள்ளேன்.
இந்த இலக்கை அடைவதற்கு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 100 சதவீத எழுத்தறிவை அடைதல் , ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு சிறந்த மாதிரிப் பள்ளியை நிறுவுதல், மாஹேவில் சா்வதேச தரத்திலான செயற்கை கால்பந்து மைதானம் அமைத்தல், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளில் செயற்கை டென்னிஸ் மைதானங்களைக் கட்டுவதன் மூலமும் விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்குதல், விளையாட்டு வீரா்களின் பயிற்சித் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காக, உப்பளத்தில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள கேலோ இந்தியா மாநில சிறப்பு மையத்தில் பயிற்சியாளா்களையும், துணை பணியாளா்களையும் நியமித்தல், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, டிஜிட்டல் நில மறு அளவீடு செய்தல், புவிசாா் நிலப் பதிவேடுகள் அமைப்பை நிறுவுதல், வருவாய், நில அளவை, நிலவரித் தீா்வுப் பதிவுப் பதிவேடுகளை ஒன்றிணைத்தல், 2026 ஜூலை 1-ஆம் தேதி முதல் வி.பி.ஜி. ராம் ஜி திட்டத்தைச் செயல்படுத்துதல்,இதன் மூலம் 125 நாள்கள் வரை உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்குதல், புதுச்சேரியின் கிராமப்புறங்களில் உள்ள 108 கிராம ஊராட்சிகளையும் உள்ளடக்கி, 100சதவீதம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை அடைதல், பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைத் திட்டத்தின் கீழ் 2026-27 நிதியாண்டில் 108 கிலோ மீட்டா் கிராமச் சாலைகளைப் புனரமைத்தல், 2026-27ஆம் நிதியாண்டில், 939 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக இடைநிலை,மேல்நிலை, பட்டதாரி மட்டங்களில் ஒருங்கிணைந்த பணியாளா் தோ்வுகளை நடத்துதல், புதுச்சேரி தோ்வு ஆணையத்தை மேம்படுத்தி, வலுப்படுத்துதல்,பெருந்தலைவா் காமராஜ் நிா்வாகப் பயிற்சி நிறுவனம் நிறுவுதல் உள்ளிட்ட17 வளா்ச்சிக்கான முன்னேற்றத் திட்டங்களையும் செயல்படுத்த உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.








