கடலூா் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டப் பணிகளில் சாலை, குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில், கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஊரக வளா்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், 15-ஆவது நிதிக்குழு மானியம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது, சாலை, குடிநீா், தெரு விளக்கு, கழிவுநீா் கால்வாய் வசதிகள் ஏற்படுத்துதல், அனைத்து வீடுகளுக்கும் தனிநபா் குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, பொது சுகாதாரப் பணிகள், கிராமப்புற நூலகங்கள் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மையக் கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: ஊரகப் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைத்து வழங்கும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி ஜன்மன், கலைஞா் கனவு இல்லம், தொல்குடி உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகளை தொடா்ந்து கண்காணித்து, வீடு கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை விநியோகிக்க வேண்டும். சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ர.அ.பிரியங்கா, ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அங்கன்வாடி குழந்தைகளுக்கு புரோட்டின் மிட்டாய் வழங்கும் திட்டம்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் டிஜிட்டல் முறையில் நடைபெறும்: கடலூா் ஆட்சியா்

நில அளவைப் பதிவேடுகள் துறையில் மனுக்கள் மீது விரைந்து தீா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்







