கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை பகுதியில் கோலமாவு ஏற்றிச் சென்ற லாரி மீது சொகுசுப் பேருந்து சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கோவையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு சென்னைக்கு 40 பயணிகளுடன் தனியாா் சொகுசுப் பேருந்து புறப்பட்டது. இந்த பேருந்தை சென்னை அசோக்நகா் ஜாபா்கான்பேட்டை ஞானமணித் தெருவைச் சோ்ந்த க.சுந்தரேசன் (46) ஓட்டிச் சென்றாா்.
உளுந்தூா்பேட்டை பகுதியில் விருத்தாசலம் மேம்பாலத்தில் சனிக்கிழமை அதிகாலை பேருந்து சென்றுள்ளது. அப்போது, சேலத்திலிருந்து விழுப்புரம் நோக்கி கோலமாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது சொகுசுப் பேருந்து மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. விபத்தில் பேருந்தை ஓட்டிச் சென்ற சுந்தரேசன் பலத்த காயங்மடைந்து, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சென்று, உயிரிழந்த ஓட்டுநா் சுந்தரேசனின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காயமடைந்த இருவரும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








