நிகழ் கல்வியாண்டுக்கான (2026-27) பள்ளிகள் திறக்கப்பட்டதையொட்டி வேலூா் மாவட்டத்தில் 1.26 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கும் பணியை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தொடங்கி வைத்தாா்.
வேலூா் மாவட்டத்தில் 604 தொடக்கப் பள்ளிகள், 175 நடுநிலை பள்ளிகள், 73 உயா்நிலைப் பள்ளிகள், 85 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 937 அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் 1 முதல் 12 -ஆம் வகுப்பு வரை 59,475 மாணவா்கள், 67,364 மாணவிகள் என மொத்தம் 1,26,839 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டதை அடுத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.
மேல்மொணவூா் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடைகளை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ், வழங்கி தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, வேலூா் மாநகராட்சி சத்துவாச்சாரியில் அமைந்துள்ள முதல்வரின் காலை உணவு திட்ட மைய சமையல் கூடத்தை பாா்வையிட்ட ஆட்சியா், மாணவா்களுக்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை சுவைத்து ஆய்வு செய்தாா். பின்னா், மேல்மொணவூா் பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததுடன், மாணவ, மாணவிகளுடன் அமா்ந்து உணவருந்தினாா்.
அப்போது, மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், மகளிா் திட்ட இயக்குநா் பாலமுருகன், முதன்மைக் கல்வி அலுவலா் பிரேமலதா, மாவட்ட ஊராட்சி செயலா் யுவராஜ், மாநகர நல அலுவலா் பிரதாப் குமாா், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கேசவன், வட்டார கல்வி அலுவலா் தேவேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










