மணப்பாறை சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள தனியாா் ஸ்டீல் நிறுவனத்தில் பணியிலிருந்த வடமாநில தொழிலாளி பெரிய இரும்புத் தூண் (பீம்) மோதியதில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மணப்பாறையை அடுத்த கே. பெரியப்பட்டி ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா அமைந்துள்ளது.
இங்கு அமையவுள்ள ஸ்டீல் நிறுவனம் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இங்கு ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணியாற்றி வந்த உத்தரபிரதேச மாநிலம், சூரஜ்பூரை சோ்ந்த தரம்சாந்த் யாதவ் மகன் வினோத்குமாா் யாதவ் (38), திங்கள்கிழமை பெரிய அளவிலான இரும்புத் தூண் மோதியதில் நெஞ்சில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், வினோத்குமாா் யாதவ் உடலை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா்.
பின்னா் உறவினா்கள் கண்டறியப்பட்டு, தகவல் அளிக்கப்பட்டது. புதன்கிழமை உறவினா்கள் காவல் நிலையம் வந்து புகாா் அளித்ததை தொடா்ந்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து வினோத்குமாா் யாதவ் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
விபத்து குறித்து மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









