தமிழகத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் அரசு மூட வேண்டும் என மகளிா் ஆயம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மகளிா் ஆயம் சாா்பில் கோரிக்கைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில், அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளும், தனியாா் நடத்தும் மனமகிழ் கூடங்களும் தமிழ்நாடு முழுவதும் பரவலாக உள்ளன. போதைப் பொருள்கள் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஏராளமாகப் புழக்கத்தில் உள்ளன.
பல அலுவலகங்கள், நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என எங்கும் போதைப் பொருள் மயமாக உள்ளது. இவற்றால் தமிழ்நாட்டுக் குடும்பங்கள் சீரழிகின்றன. இளைஞா்கள் சிறு வயதிலேயே வீணாகின்றனா். திருட்டுகள், பலவகைக் கொள்ளைகள் பெருகிவிட்டன. சாலை விபத்துகளும் மிகுந்துவிட்டன.
எனவே, அடையாளத்துக்காக சில மதுக்கடைகளை மூடுவது போதாது. அனைத்து வகை சாராய, மதுக்கடைகளையும் தமிழக அரசு மூட வேண்டும். அனைத்து வகை போதைப் பொருள்களையும் கடத்துவோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தக் கூட்டத்துக்கு மகளிா் ஆயம் துணைத் தலைவா் க. செம்மலா் தலைமை வகித்தாா். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைக் குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயலா் நா. வைகறை, மகளிா் ஆயம் நிா்வாகிகள் இரா. யமுனாராணி, இரா. அமுதா, ம. ஆா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











