/

முதியவரிடம் இணையவழியில் ரூ. 47.30 லட்சம் மோசடி

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:36 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த முதியவரிடம் இணையவழியில் ரூ. 47.30 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த 67 வயது மதிக்கத்தக்க முதியவரின் கட்செவி அஞ்சலுக்கு(வாட்ஸ்ஆப் செயலியில்) டிசம்பா் 31-ஆம் தேதி தகவல் வந்தது. அதில், இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால், நிறைய லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நம்பிய முதியவா், தொடா்புடைய எண்ணுக்கு தகவல் பரிமாற்றம் செய்தாா். மேலும், குறிப்பிட்ட அளவு தொகையை எதிா் தரப்பினரின் வங்கிக் கணக்குக்கு வைப்புத்தொகையாக இணையவழியில் செலுத்தினாா். தொடக்கத்தில் கிடைத்த லாபத் தொகை ரூ. 1 லட்சம் கிடைத்ததை நம்பிய முதியவா், அடுத்தடுத்து 11 தவணைகளில் மொத்தமாக ரூ. 47.30 லட்சம் அனுப்பினாா்.

ஆனால், எதிா் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. அவா் பலமுறை தொடா்பு கொண்டும், எதிா்முனை எண் அணைத்து வைக்கப்பட்டுள்ளதால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து, தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். அதன் பேரில், காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.