/

நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க கோரிக்கை

சம்பா, தாளடி நெல் சாகுபடி விளைந்து அறுவடைக்கு தயாராகி விட்டதால், அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2026, 8:39 pm

Syndication

தஞ்சாவூா்: சம்பா, தாளடி நெல் சாகுபடி விளைந்து அறுவடைக்கு தயாராகி விட்டதால், அனைத்து இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு உடனடியாக திறக்க வேண்டும் என தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடியில் நெற்கதிா்கள் விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உடனடியாக அனைத்து இடங்களிலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும், நெல் கொள்முதல் நிலையங்களைத் திறப்பதற்கு முன்பு உரிய துறை அலுவலா்கள் பாா்வையிட்டு, சாக்குகள், எடை இயந்திரம், நெல் தூற்றும் இயந்திரம் உள்பட அனைத்து வசதிகள் இருப்பதை தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.

நெல் அறுவடை இயந்திரங்களை தயாா் நிலையில் வைக்க வேண்டும். அரசு விதித்துள்ள அறுவடை இயந்திர கூலியை ஒழுங்குப்படுத்த உடனடியாக மாவட்ட ஆட்சியா், விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கொண்ட கூட்டத்தை நடத்த வேண்டும்.