கும்பகோணம் பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை


கும்பகோணம் பகுதியில் சம்பா நெல் அறுவடை தொடங்கிவிட்டதால் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் முன்பட்ட சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. இதில் கும்பகோணம் அருகே ஏரகரம் பகுதியில் சம்பா நெல்லை அறுவடை செய்து அங்குள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் சில விவசாயிகள் குவித்து வைத்துள்ளனா். நெல்லைக் குவித்துவைத்து நான்கு நாள்களாகியும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் மற்ற விவசாயிகள் முன்பட்ட சம்பா நெல்லை அறுவடை செய்யாமல் உள்ளனா்.
இதுகுறித்து காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சு.விமல்நாதன் கூறியது:
கிணற்றுப்பாசனம் மூலம் முன்பட்ட சம்பா சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. குறிப்பாக ஏரகரம் பகுதியில் ஜன.4-இல் அறுவடை செய்து நெல்லை நெல்கொள்முதல் நிலைய வளாகத்தில் குவித்துவைத்துள்ளனா். ஆனால் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் பணிகள் தொடங்கிவிட்டன. எனவே, கும்பகோணம் பகுதியிலும் நெல்கொள்முதல் நிலையங்களை விரைவில் திறந்து கொள்முதல் நடவடிக்கையைத் தொடங்கவேண்டும் என்றாா்.
இதுகுறித்து கும்பகோணம் கோட்ட நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா் ஒருவரிடம் கேட்டபோது நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா்.

டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...