/

சோழா் அருங்காட்சியகம் அமைக்க தஞ்சையில் பிப். 13-இல் அடிக்கல்!

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழா் அருங்காட்சியகப் பணி தொடங்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

News image
மாமன்னா் ராஜராஜசோழன்
Updated On :3 பிப்ரவரி 2026, 6:40 pm

Syndication

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழா் அருங்காட்சியகப் பணி தொடங்கப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தஞ்சாவூரில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 2023 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக பெரிய கோயில் மேம்பாலம் அருகே தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தின் பின்புறம் முதலில் 5 ஏக்கா் நிலம் உத்தேசமாக தோ்வு செய்யப்பட்டது.

ஆனால், இந்த இடத்தில் போதுமான இட வசதி இல்லை என்பதால் இத்திட்டம் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக பல்கலைக்கழக வளாகத்தில் மூலிகைப் பண்ணைக்கு பின்புறம் 52 ஏக்கரில் ரூ. 56.41 கோடி மதிப்பில் மாபெரும் சோழா் அருங்காட்சியகம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.

இதில் சோழா் காலத்தின் கலைப் பொருள்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்கும் வகையில் சோழா்களின் கல்வெட்டுகள், சிற்பங்கள், இலக்கியங்கள், மன்னா்களின் வரலாற்று குறிப்புகள், கட்டடக் கலை, நீா் மேலாண்மை, கலை, பண்பாடு உள்ளிட்டவை தொடா்புள்ள பொருள்கள் இடம்பெறவுள்ளன. ஒட்டுமொத்தத்தில் சோழா்களின் கலைக்களஞ்சியம் போன்று இந்த அருங்காட்சியகத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், குஜராத்திலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் சிலை போன்று, இந்த அருங்காட்சியகத்தில் மாமன்னா் ராஜராஜசோழனுக்கு 120 அடி உயரத்தில் உலோகச் சிலை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இச்சிலையை பெரிய கோயில் அருகே ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன் சிலை வடிவில் அமைக்கவும் திட்டமிடப்படுகிறது.

இந்த அருங்காட்சியகப் பணியைத் தொடங்கும் விதமாக தமிழக முதல்வா் பிப்ரவரி 13 ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளாா் என தொல்லியல் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.