தனித் தேர்வர்களாக தேர்வு எழுத நிர்பந்தம்
திருவெறும்பூர், டிச. 28: அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையாமல் இருப்பதற்காக, பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவிகளை தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதுமாறு அரசுப் பள்


திருவெறும்பூர், டிச. 28: அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் குறையாமல் இருப்பதற்காக, பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவ, மாணவிகளை தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுதுமாறு அரசுப் பள்ளிகள் நிர்பந்தம் செய்வதாக மாணவ, மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
அனைவரும் கல்வியறிவு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு தனித் தேர்வு முறையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் பள்ளிக்குச் செல்லாத மாணவ, மாணவிகளும்கூட தங்கள் பகுதியில் தனியார் நடத்தும் தனிப் பயிற்சி பள்ளி மூலம் தனித் தேர்வு எழுதுகின்றனர்.
மேல் படிப்புக்குச் செல்ல அடிப்படையாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருப்பதால், கிராமப்புறங்களில்கூட தங்கள் குழந்தைகளை 10-ம் வகுப்பு வரையாவது படிக்கவைத்துவிட வேண்டும் என்று பெற்றோர் விரும்புகின்றனர்.
வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வை தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 7 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனித் தேர்வர்கள். இதேபோல, மார்ச் மாத இறுதியில் நடைபெற உள்ள எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்விலும் கணிசமான அளவிற்கு தனித் தேர்வர்கள் எழுதுகின்றனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம், தனித் தேர்வு எழுதுகிறவர்களில் பலர் அரசுப் பள்ளியில் பயிலும் சராசரி மதிப்பெண்ணுக்கும் குறைவான மதிப்பெண் எடுக்கும் மாணவ, மாணவிகள் என்று கூறப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் தனியார் அகாதெமியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி சதம் குறையக் கூடாது என்பதற்காக, பள்ளித் தேர்வுகளில் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை இந்த தனியார் நிறுவனங்கள் மூலம் தனித் தேர்வு எழுத அனுப்பிவைப்பதாகக் கூறப்படுகிறது.
திருச்சி மேலகல்கண்டார்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், மேலகல்கண்டார்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் செல்லதுரை, ஆலத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சரவணன், மணி மகன் பிரசாந்த், மூர்த்தி மகன் வேல்முருகன், பெனசீர் பானு, சிவரஞ்சனி, கிருத்திகா, சலோமி, சூர்யா, பாட்ஷா ஆகியோர் பள்ளித் தேர்வுகளில் சராசரிக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றனர்.
இதனால் அரசுத் தேர்வில் மேற்கண்ட மாணவர்கள் மூலம் தேர்ச்சி சதம் குறைந்து விடுமோ என்று கருதிய ஆசிரியர்கள், இந்த மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களிடம், உங்கள் பிள்ளைகள் பள்ளி மூலம் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது, அவர்கள் தனித் தேர்வர்களாக அரசுத் தேர்வை எழுத வேண்டும் என்று கூறி, பெற்றோர்களிடம் தனித் தேர்வுக் கட்டணத்தையும் வசூல் செய்து, விண்ணப்பத்தை நிறைவு செய்தும் அனுப்பிவைத்துள்ளனர். இதுபோல பல பள்ளிகளிலும் நடப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவர்களின் பெற்றோர்கள் கூறியது:
எங்கள் குழந்தைகள் ஏதாவது ஓரு பாடத்தில் மட்டும்தான் தோல்வி அடைந்து வருகின்றனர். ஆனால், ஆசிரியர்கள் உங்கள் குழந்தைகள் மதிப்பெண் குறைவாக உள்ளது. அதனால், பள்ளி மூலம் தேர்வு எழுத முடியாது. தனித் தேர்வு மூலம்தான் தேர்வு எழுத முடியும். தேர்வு தொடங்குவதற்க்கு முன் மாற்றுச் சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள் என்று எங்களை வலியுறுத்துகின்றனர்.
குறைவான மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களை, அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில், திறமையானவர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆனால், அதைச் செய்யாமல் பள்ளியின் தேர்ச்சி சதத்தை அதிகமாகக் காட்ட வேண்டும் என்ற காரணத்திற்காக, அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நடந்து கொள்ளும் விதம் வேதனை அளிப்பதாக உள்ளது என்றனர் இந்த மாணவர்களின் பெற்றோர்கள்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் டி. மோகனகுமார் கூறியது:
அரசுப் பள்ளிகளில் இதுபோல நடைபெற வாய்ப்பில்லை. இந்தப் புகாரில் உண்மையிருந்தால், உடனடியாக அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...