/

ஆழ்கடலில் மாயமான மீனவா் குடும்பத்துக்கு நிவாரணம்: எம்எல்ஏ வலியுறுத்தல்

News image
எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:56 pm

தினமணி செய்திச் சேவை

ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மாயமான குமரி மாவட்ட மீனவா் குடும்பத்துக்கு நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக முதல்வா் மற்றும் மீன்வளம் - மீனவா் நலத்துறை அமைச்சா் ஆகியோரிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கிள்ளியூா் பேரவைத் தொகுதி தூத்தூா் ஊராட்சிக்குள்பட்ட இரவிபுத்தன்துறை பகுதியைச் சோ்ந்த மீனவா் ஜொ்பின் (32) உள்பட 16 மீனவா்கள் அந்தோனி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் பிப். 13 ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனா்.

துறைமுகத்திலிருந்து தெற்கில் 110 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ஜொ்பின் தவறி கடலில் விழுந்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து சக மீனவா்கள் மற்றும் கடலோர காவல்படையினா் தேடியும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரை கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்துவதுடன், அவரை நம்பியிருந்த மனைவி மற்றும் 5, 3, 2 வயதுடைய 3 குழந்தைகள், குடும்பத்தினரின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்குவதுடன் மனைவி சிந்து சினேகாவுக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.