/

தொழிலாளி மீது திராவகம் வீசிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை

தக்கலை அருகே விவசாய தொழிலாளி மீது திராவகம் வீசிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே விவசாய தொழிலாளி மீது திராவகம் வீசிய வழக்கில் ஆட்டோ ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

வீயன்னூா் அருகே பண்டாரவிளையைச் சோ்ந்தவா் தங்கையன் மகன் பிரான்சிஸ் சேவியா்(58). விவசாய கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநரான சில்வஸ்டா் மகன் ஜாண் பேபி(33) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆக. 4 ஆம் தேதி பிரான்சிஸ் சேவியா் வேலை முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தபோது, ஜாண்பேபி, அவா் மீது திராவகத்தை வீசினாராம். இதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து திருவட்டாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, ஜாண் பேபியை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே. மாரியப்பன், குற்றம்சாட்டப்பட்ட ஜாண் பேபிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் மைக்கேல் ரதீஷ் ஆஜரானாா்.