நாகர்கோவில்-சென்னை-நாகர்கோவில் அரசுப் பேருந்தில் இலவச வைஃபை வசதி: பொதுமக்கள் வரவேற்பு
நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்லும் திருநெல்வேலி மண்டல அரசுப் பேருந்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


நாகர்கோவிலிலிருந்து சென்னை செல்லும் திருநெல்வேலி மண்டல அரசுப் பேருந்தில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாகர்கோவிலிலிருந்து 700 கி.மீ. தொலைவு உள்ள சென்னைக்கு செல்ல அரசுப் பேருந்தில் குறைந்தது 14 முதல் 15 மணி நேரம் பயண நேரம் ஆகிறது. அதே வேளையில் தனியார் பேருந்துகள் படுக்கை வசதி, குறைந்த நேர பயணம், இலவச வைஃபை வசதி என பயணிகளை ஈர்த்து வருகின்றன. இதனால் தனியார் பேருந்துகளை பயணிகள் அதிகளவில் விரும்பி பயணிக்கின்றனர்.
இந்நிலையில் பயணிகளை கவரும் வகையில் நாகர்கோவில் கோட்டத்திலிருந்து, சென்னைக்கு செல்லும் வகையில் 5 சாய்வு இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் இரு பேருந்துகள் சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு மாலை 5, 6 மணிக்கும், இதே போல் இரு பேருந்துகள் நாகர்கோவிலிலிருந்து சென்னைக்கு மாலை 5, 6 மணிக்கும் புறப்படுகின்றன.
இதில் இரு மார்க்கத்திலும் மாலை 6 மணிக்கு புறப்படும் "நாஞ்சில் ராஜா' என்ற பெயர் கொண்ட பேருந்துகளில் இளம் தலைமுறையினரை கவரும் வகையில் இலவச வைஃபை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பேருந்துக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியது: "நாஞ்சில் ராஜா', "நாஞ்சில் தென்றல்' என்ற பெயர்களில் இரு வழித்தடங்களிலும் தலா இரு பேருந்துகள் வீதம் நான்கு பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளோம். மற்றொரு பேருந்து கூட்ட நேரங்களில் மட்டும் இயக்கப்படுகிறது.
இந்த பேருந்துகளுக்கு நாகர்கோவில் - சென்னை இடையே அதிகபட்ச பயண நேரம் 12 மணி நேரமே. மாலை 6 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டால், மறுநாள் காலை 6 மணிக்கு நாகர்கோவில் வந்துவிடலாம். இது அரசு விரைவுப் பேருந்து போல இருக்கை அமைப்பு கொண்டது. மொத்தம் 44 இருக்கைகள் கொண்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இலவச வைஃபை வசதியை அறிமுகம் செய்தோம். மாலை 6 மணிக்கு சென்னை, நாகர்கோவிலிலிருந்து புறப்படும் "நாஞ்சில் ராஜா' பெயர் கொண்ட பேருந்துகளில் மட்டும் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 32 பேர் இலவச வைஃபை சேவையை பயன்படுத்த முடியும். 250 மீட்டர் தொலைவு வரை இந்த சேவை கிடைக்கும்.
இதில் பயணி பெயர், கடவு எண் (பாஸ்வேர்டு) ஆகியவை ஓட்டுநர் இருக்கையின் பின்பகுதியில் எழுதி ஒட்டப்பட்டிருக்கும். பேருந்தில் இணையத்தை பயன்படுத்தி செல்வோருக்கு செல்லிடப்பேசி பேட்டரியில் சார்ஜ் இறங்கும் நிலை இருப்பதால், 5 பிளக் பாயிண்டும் அமைத்துள்ளோம். இதன் காரணமாக எங்கள் பேருந்து நாகர்கோவிலிலேயே சீட் முழுமையாகி விடுகிறது. இதனால் பயண நேரமும் குறைகிறது. 11 மணி நேரத்தில் சென்னைக்கு சென்றுவிடுகிறோம் என்றார் அவர்.
தனியார் பேருந்துகளுக்கு இணையாக பந்தயக் குதிரையாக அரசுப் பேருந்தை மாற்றியுள்ள போக்குவரத்து அதிகாரிகளின் முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...