தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பதிவு அறையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
இந்த சம்பவத்தில் உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான முகாந்திரம் தெரிகிறது. சரியான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை.
நீதிமன்றத்தின் உள்ளே இருந்த மற்ற அறைகளுக்கும் தீ வேகமாக பரவியதுடன், கட்டடத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் கீழமை நீதிமன்றப் பதிவு அறையில் இருந்து புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிப்பட்டதைத் தொடா்ந்து, காவலாளி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தாா்.
முதலில் பீம் நகா் தீயணைப்பு நிலையத்தில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்தன. அதன் பின்னா், 10 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








