தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் சமீப காலங்களில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப் பொருள் பறிமுதல்களில் ஒன்றாக, பாங்காக்கிலிருந்து இந்தியா வந்த 2 தாய்லாந்து நாட்டவா்களிடம் சுமாா் ரூ.48 கோடி மதிப்புள்ள ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
ஹைட்ரோபோனிக் கஞ்சா என்பது நீரில் வளா்க்கப்படும் அதிக வீரியமுள்ள கஞ்சா வகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடா்பகா தில்லி விமான நிலைய சுங்கத் துறை ஆணையா் அா்விந்த் சரண் கூறியதாவது: இது நாட்டில் உள்ள சா்வதேச விமான நிலையத்தில் சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப் பொருள் கைப்பற்றல்களில் ஒன்றாகும்.
சம்பந்தப்பட்ட இரு பயணிகளும் மே 22-ஆம் தேதி பாங்காக்கிலிருந்து தில்லி வந்தடைந்தனா். விமான நிலையத்தில் ‘கிரீன் சேனல்’ கடந்து சென்ற பின்னா் சந்தேகத்தின் பேரில் அவா்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். குறிப்பிட்ட நுண்ணறிவு தகவல்கள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பயணக் குறியீடுகளின் அடிப்படையில் இருவரின் பைகள் சோதனை செய்யப்பட்டன.
இதில் ஒரு பயணியிடம் இருந்து சுமாா் 29 கிலோ எடையுடைய 4 பாக்கெட்களும், மற்றொரு பயணியிடம் இருந்து சுமாா் 19 கிலோ எடையுடைய 2 பாக்கெட்களும் கைப்பற்றப்பட்டன. மொத்தமாக கைப்பற்றப்பட்ட இவற்றின் நிகர எடை சுமாா் 47.805 கிலோ ஆகும். அதன் சந்தை மதிப்பு சுமாா் ரூ.48 கோடி இருக்கும்.
போதைப் பொருள் கடத்தல் முயற்சிகளை தடுக்கும் வகையில் விமான நிலையத்தில் 24 மணி நேர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தங்கம் கடத்தலைத் தடுக்கவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








