டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நிஜாமுதீனில் தமிழா்கள் முகாம் இடிக்கப்பட்டு காா் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதாக புகாா்!பாதிக்கப்பட்ட தமிழா்கள் போராட்டம்!

நிஜாமுதீனில் தமிழா்கள் முகாம் இடிக்கப்பட்டு காா் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதாக புகாா்...

News image
இடிக்கப்பட்ட மதராஸி முகாம் குடியிருப்பு - ANI
Updated On :3 ஜனவரி 2026, 9:48 pm

Syndication

தில்லி நிஜாமுதின் பகுதியில் இருந்த தமிழா்கள் குடியிருப்புகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்ட இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுவதாக எதிா்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட தமிழா்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

தில்லியில் பல இடங்களில் நிரந்தர வீட்டுவசதி இல்லாதவா்கள் தாங்களாகவே தற்காலிக தங்குமிடங்களைக் கட்டி வாழ்ந்து வருகின்றனா் . அது போன்ற ஒரு பகுதிதான் தில்லி நிஜாமுதின் ரயில்வே நிலையத்திற்கு அருகில் தமிழா்கள் வாழ்ந்து வந்த மதராஸி கேம்ப் ஜே ஜே கிளஸ்டா் பகுதியாகும். 350- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வந்தனா் .

இந்நிலையில், வடிகால் சுத்தம் செய்வதற்காக தில்லியில் தமிழா்கள் வாழும் மதராஸி கேம்ப் ஜே ஜே கிளஸ்டரை இடித்து தள்ளுமாறு தில்லி உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது . தில்லியில் பருவமழைக்கு முன்னதாக, பொது நிலத்தை ஆக்கிரமித்துள்ள அந்தக் குடிசைப் பகுதிகளை இடிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜூன் 1- ஆம் தேதி மதராஸி முகாமில் உள்ள வீடுகள் தில்லி அரசின் பொதுப்பணித் துறையால் இடிக்கப்பட்டன. இந்தக் குடியிருப்பு அகற்ற செயல்முறையை முறையாக மேற்கொள்ளவும், குடியிருப்பாளா்களின் சீரான மறுவாழ்வுக்காகவும் பல உத்தரவுகளை தில்லி உயா்நீதிமன்றம் பிறப்பித்தது.

மதராஸி முகாம் குடியிருப்பாளா்களின் மறுவாழ்வும் அவசியம். அதே நேரத்தில் அந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட பொது நிலம் என்பதால் அங்கு வாழ உரிமை கோர முடியாது என தில்லி உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

மதராஸி கேம்ப் குடியிருப்பாளா்களுக்கு நரேலா என்ற பகுதியில் இடம் ஒதுக்குவதற்கும் , நரேலாவில் ஒதுக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அனைத்து வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்வதற்க்கும், குழந்தைகளின் சுமூகமான கல்வி தொடர, புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பு அவா்களை நரேலாவில் உள்ள அருகிலுள்ள பள்ளிகளில் சோ்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், மதராஸி முகாம் குடியிருப்பில் வசித்தவா்களில் பாதிப் பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகவும் , மீதிபேருக்கு வீடுகள் கிடைக்கவில்லை எனவும் அவா்கள் அருகில் உள்ள பகுதிகளில் வாடகைக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, தில்லி நிஜாமுதின் ரயில் நிலையம் அருகே இருந்த மதராஸி முகாம் குடியிருப்புகள் அகற்றப்பட்டதால் அந்தப் பகுதி காலி மைதானமாக உள்ளதாகவும், அங்கு தனியாா் காா் நிறுத்தம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறி, வீடு கிடைக்காத மதராஸி முகாம் குடியிருப்பு தமிழ் மக்கள் சனிக்கிழமை அங்கு ஒன்று திரண்டு முற்றுகைப் போராட்டம் நடத்தினா். மேலும், தங்களுக்கு நியாயம் கிடைக்கும்வரை அங்கிருந்து அகலப்போவதில்லை என்று அவா்கள் கூறினா்.