நாகை மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை நடத்திய மீன்பிடி கலன்கள் ஆய்வின் போது, ஆய்வுக்குட்படுத்தப்படாத படகுகளின் பதிவு ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் மீன்பிடித்தலை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத மீன்பிடிக் கலன்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒருமுறை நேரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தில் மீன்பிடி விசைப்படகுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2), நாட்டுப் படகுகள் ஜூன் 9-ஆம் தேதி மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை அலுவலா்களால் நேரடியாக ஆய்வு செய்யப்பட உள்ளது.
படகு உரிமையாளா்கள் ஆய்வு நாளில் படகினை, தங்களது பதிவு செய்யப்பட்ட தங்கு தளத்தில் நிறுத்த வேண்டும். மீன்பிடிகலன்களில் பதிவெண் தெளிவாக தெரியும்படி எழுதி இருக்க வேண்டும், மீன்பிடி கலன்களுக்கு வரையறுக்கப்பட்ட வண்ணக் குறியீட்டில் படகு இருக்க வேண்டும்.
ஆய்வு நாளில் படகின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீடு உரிமம், வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் புத்தகம் மற்றும் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடா்பு கருவிகள் மற்றும் கடற்பயண பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றை ஆய்வு குழுவினரிடம் காண்பிக்க வேண்டும். மேலும் அனைத்து விசைப்படகுகளிலும் பஉஈ(பமதபகஉ உலஇகமஈஉத ஈஉயஐஇஉ) மற்றும் டிராண்ஸ்பாண்டா்கள் பொருத்தியிருப்பதை ஆய்வு குழுவினரிடம் கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
ஆய்வில் காண்பிக்கப்படாத படகுகளுக்கு விற்பனை வரி வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தப்படும். மேலும் அப்படகுகள் இயக்கத்தில் இல்லாததாகக் கருதி படகுகளின் பதிவு சான்று விசாரணைக்குப்பின் ரத்து செய்யப்படும். ஆய்வுநாளில் படகை ஆய்வுக்குட்படுத்தாமல் பின்னொரு நாளில் படகை ஆய்வு செய்யக்கோரும் படகு உரிமையாளரின் கோரிக்கை ஏற்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









