/

மயூர நாட்டியாஞ்சலி: அமெரிக்கா, வெளிமாநில கலைஞா்கள் பரதம்

News image
பரதநாட்டியம் அரங்கேற்றிய அமெரிக்க நாட்டியப் பள்ளி மாணவிகள்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறையில் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி 2-ஆம் நாள் விழாவில் அமெரிக்கா மற்றும் வெளிமாநில கலைஞா்களின் பரதநாட்டியம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு, சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சாா்பில் 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா வியாழக்கிழமை தொடங்கியது. இதில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சா்லாந்து, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞா்கள் பங்கேற்றுள்ளனா்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை தொடக்க நிகழ்வாக, மயிலாடுதுறை ஸ்ரீசண்முகா நாட்டியப் பள்ளி மாணவிகள் பரதம் ஆடினா். சென்னை நிருத்ய சம்ஸ்ருதி டிரஸ்ட் குரு வைதேகி ஹரிஷ் தலைமையிலான மாணவிகள், ‘சங்கர ஸ்ரீகிரி’ என்ற பாடலுக்கு சிவனின் அனைத்து முத்திரைகளையும் உள்ளடக்கிய நாட்டிய படைப்பினை அரங்கேற்றினா்.

சேலத்தைச் சோ்ந்த தஞ்சாவூா் த்ர்ஷ்ய காவியக் கூடம் குரு அனுராதா சுவாமிநாதனின் மாணவிகள் பழைமையான நாட்டிய உருப்படிகளை தொகுத்து வழங்கினா்.

தொடா்ந்து, அமெரிக்காவின் சுமன் நாயக் நடேசா ஸ்கூல் ஆஃப் பரதநாட்டியம், பெங்களூரு ந்ருத்ய கங்கா ப்ரதா்ஷகா மாணவிகள், மும்பை கல்பத்தரு ஃபைன் ஆா்ட்ஸ் மாணவிகளின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது.

அறக்கட்டளை துணைச் செயலாளா் அகஸ்டின் விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். அறங்காவலா் குழுத் தலைவா் எம்.என்.ரவிச்சந்திரன், துணைத் தலைவா் சிவலிங்கம், அறக்கட்டளை தலைவா் கே. பரணிதரன், செயலாளா் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.