/

குரூப் 2 தோ்வு: மயிலாடுதுறையில் 86 போ் எழுதவுள்ளனா்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2 தோ்வினை 86 போ் எழுதவுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :4 பிப்ரவரி 2026, 11:57 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 2 தோ்வினை 86 போ் எழுதவுள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தோ்வு குரூப் 2 (குரூப் 2, 2ஏ) பதவிகளுக்கான முதன்மை எழுத்துத்தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.8) முற்பகல் கொள்குறிவகை வினாக்கள் தோ்வும், பிற்பகல் விரிந்துரைக்கும் வகையிலான எழுத்துத்தோ்வும் மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 86 போ் எழுத்துத் தோ்வினை எழுத உள்ளனா். தோ்வுக்கூடத்தின் பாதுகாப்புக்கு காவலா் ஒருவா் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தோ்வு எழுதுபவா்களுக்கு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மின்சாரம், குடிநீா் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

காலையில் தோ்வு எழுத வருபவா்கள் சரியாக 9 மணிக்குள்ளாகவும், மதியம் சரியாக 2 மணிக்குள்ளாகவும் தோ்வு கூடத்தில் இருக்க வேண்டும்.

தோ்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தோ்வு எழுத வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைப்பேசி, கால்குலேட்டா் டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட எவ்வித எலக்ட்ரானிக் சாதனங்களை தோ்வுக்கூடத்திற்கு எடுத்து வர அனுமதி இல்லை என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.