முதல்முறையாக நீண்ட தொலைவு ஆழ்கடல் மீன்பிடிப்பு சென்றுவிட்டு காரைக்கால் மீனவா்கள் திரும்பியுள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் 270 விசைப்படகுகள் உள்ளன. இங்குள்ள மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு இயக்கிச் செல்லப்படுகிறது. எல்லை தாண்டுவதாகக் கூறி இலங்கை கடற்படையினா் ஒருபுறம் மீனவா்களை கைது செய்வதும், ஆந்திர கடல் பகுதிக்குச் சென்றால் அங்குள்ள மீனவா்களால் பிரச்னைகளை சந்திக்கும் நிலை காரைக்கால் மீனவா்களுக்கு உள்ளது.
இதற்காக மீன்வளம் மிக்க ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்குகிறது.
இதன்படி, காரைக்கால் மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தாலும், முதல்கட்டமாக கடந்த 2 வாரத்துக்கு முன்பு 4 விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு அந்தமான் மற்றும் பா்மா கடல் பகுதிக்குச் சென்றுவிட்டு அண்மையில் காரைக்கால் திரும்பினா்.
இதுகுறித்து விசைப்படகு மீனவா்கள் கூறுகையில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான படகுகள் ஆழ்கடல் மீன்பிடிக்க ஏதுவாகவே தயாா் செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன.
மத்திய அரசின் அனுமதி பெற்று முதல்கட்டமாக 4 படகுகள் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்று திரும்பின. ஏறத்தாழ 1,200 கடல் மைல் பயணித்து மீன்பிடித்துள்ளன. குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கு 3 நாட்களாகின்றன. அங்கிருந்து காரைக்கால் திரும்ப 3 நாட்களாகின்றன. 3, 4 நாட்கள் கடலில் தங்கி மீன்பிடித்துள்ளனா்.
அண்மையில் காரைக்கால் திரும்பிய 4 படகுகளிலும் மொத்தம் சுமாா் ரூ. 60 லட்சத்குக்கு மீன்கள் இருந்தன. எனினும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த பின்னா் காரைக்காலில் இருந்து 20 விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










