/

பந்தல்குடி சீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு  வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 6:15 pm

DIN

அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு  வியாழக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பந்தல்குடி அருகே அன்புமாடல் நகரில் அமைந்துள்ளது சீரடி சாய்பாபா கோயில். இக்கோயில் நிர்வாகத்தினர் சார்பில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. முதலில் சிறப்பு வழிபாட்டுப் பாடல் நிகழ்ச்சி சீரடி சாய் பாபா பக்த சபா சார்பில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அருப்புக்கோட்டை நடன ஆசிரியர் ஜெயக்குமார் முன்னிலையில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் நடனநாட்டிய  நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதையடுத்து சீரடி சாய்பாபா விக்கிரகம் அமைந்த மேடையைச் சுற்றியுள்ள வளாகம் முழுமைக்குமாக வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, அருள்மிகு சீரடி சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. 

அப்போது பக்தர்கள், மலர்கள், பழங்கள், பிஸ்கட்டுகள், இனிப்புகளை பாபாவிற்குப் படைத்து பக்தியுடன் வழிபட்டனர். அதன்பின் வழிபாட்டிற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் புத்தாண்டை சிறப்பிக்கும் விதமாக சிறப்பு பூஜை செய்த நாணயங்கள் வழங்கப்பட்டன. 

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகியும் தொழிலதிபருமான வி.சுந்தரமூர்த்தி செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500க்கு மேற்பட்ட பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு வழிபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.