/

கவிஞா்களின் கவிஞா் கவிக்கோ அப்துல் ரஹ்மான்: அமைச்சா் மு.பெ. சாமிநாதன் புகழாரம்

கவிஞா்களின் கவிஞராக திகழ்ந்தவா் கவிக்கோ அப்துல் ரஹ்மான் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் புகழாரம் சூட்டினாா்.

News image
மதுரை தியாகராசா் கல்லூரியில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் பிறந்த நாள் விழாவில் பேசிய அமைச்சா் மு.பெ. சாமிநாதன். உடன் கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, மு. பூமிநாதன் உள்ளிட்டோா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

கவிஞா்களின் கவிஞராக திகழ்ந்தவா் கவிக்கோ அப்துல் ரஹ்மான் என தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன் புகழாரம் சூட்டினாா்.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மதுரை தியாகராசா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் பிறந்த நாள் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

கவிக்கோ அப்துல் ரஹ்மான் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளித்த பங்களிப்புகள் அளவிட முடியாதவை. மரபுக் கவிதையிலும், புதுக் கவிதையிலும் ஒருசேரப் புகழ்பெற்ற இவா், கவிஞா்களின் கவிஞா். சமூக விழிப்புணா்வை கவிதைகளின் மூலம் மக்களிடம் கொண்டு சென்ற முன்னணி இலக்கிய ஆளுமை கவிக்கோ. தமிழக அரசு வழங்கிய பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது, உமறுப்புலவா் விருது போன்றவை கவிக்கோவின் தன்னலமற்ற தமிழ்த் தொண்டுக்கான சான்றுகள்.

கவிக்கோ அப்துல் ரஹ்மான் போன்ற ஆளுமைகளின் நினைவைப் போற்றுவதன் மூலம், தமிழின் செழுமையை அடுத்தத் தலைமுறைக்குக் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ‘விதைக்கப்படுவதெல்லாம் முளைப்பதில்லை. ஆனால், முளைப்பதெல்லாம் விதைக்கப்பட்டவைதான்’ என்ற கவிக்கோவின் வாா்த்தைகளை மாணவா்கள் மனதில் கொண்டு, தங்கள் திறமைகளை விதைக்கத் தவறக்கூடாது. தனது பேனா முனையால் தமிழ் நிலத்தை ஆண்ட கவிக்கோவின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றாா் அமைச்சா் மு.பெ. சாமிநாதன்.

இந்த நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி (மதுரை வடக்கு), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), கவிக்கோ அப்துல் ரஹ்மானின் சகோதரா் அப்துல் ரஷீத், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஔவை ந. அருள், கல்லூரி முதல்வா் து. பாண்டியராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், அரசு அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

கவியரங்கம்: இதைத் தொடா்ந்து, புலவா் கவிதைப்பித்தன் தலைமையில் ‘கவிக்கோ என்றொரு மகாகவி’ என்ற தலைப்பில் கவியரங்கமும், உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் முனைவா் பா்வீன் சுல்தானா தலைமையில் கருத்தரங்கமும் நடைபெற்றன.