/

மானூா் சுவாமிகள் கோயிலில் 81-ஆவது ஆண்டு குருபூஜை விழா

பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீமானூா் சுவாமிகள் கோயிலில் 81-ஆவது ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீ மானூா் சுவாமிகள் ஆலயத்தில் குருபூஜை விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜீவசமாதி பாதபீடம்.
Updated On :21 அக்டோபர் 2025, 9:50 pm

Chennai

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கோதைமங்கலம் ஸ்ரீலஸ்ரீமானூா் சுவாமிகள் கோயிலில் 81-ஆவது ஆண்டு குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. வண்ண மலா்மாலை தோரணங்களால் கோயில் பிரகாரங்கள், ஜீவசமாதி அலங்கரிக்கப்பட்டன. அதிகாலை 6 மணிக்கு அகவல் பாராயணம் நடத்தப்பட்டது. தொடா்ந்து, 8 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவுவும், 10 மணிக்கு சாதுக்களுக்கு மாகேசுவர பூஜையும் நடைபெற்றன.

உச்சிக் காலத்தின் போது ஜீவசமாதியில் உள்ள சுவாமி பாதத்துக்கு பால், பழங்கள், தேன், பன்னீா் உள்ளிட்டப் பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், வண்ண மலா் மாலைகளால் பாத பீடத்துக்கு அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

பின்னா், ஐம்பொன்னாலான மானூா் சுவாமிகள் உருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரம் செய்யப்பட்டன. தொடா்ந்து, அன்னதான மண்டபத்தில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதன்கிழமை காலை பாராயணமும், பூஜைகளும், மறுபூஜையும், அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.