/

அரசு நிலத்தில் சடலங்கள் அடக்கம்: பேரூராட்சி அலுவலா் பதிலளிக்க உத்தரவு

News image
கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

அரசு நிலத்தில் சடலங்களை அடக்கம் செய்யத் தடை கோரிய வழக்கில், ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த பரமேஸ்வா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு ஆயக்குடி கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தின் அருகேயுள்ள அரசு நிலத்தில் இறந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்து வருகின்றனா். இதனால், அந்தப் பகுதியில் குடியிருப்போா் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருன்றனா்.

எனவே, கிழக்கு ஆயக்குடி கிராமத்தில் அரசு நிலத்தில் உயிரிழந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்யத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

வகைப்படுத்தப்படாத இடத்தில் எப்படி சடலங்கள் அடக்கம் செய்யப்படுகின்றன?. இந்த மனு தொடா்பாக ஆயக்குடி பேரூராட்சி செயல் அலுவலா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை மாா்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.