டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பொன்னமராவதி நகராட்சி தரம் உயா்வு அரசாணை: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நகராட்சியை தரம் உயா்த்துவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:32 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி நகராட்சியை தரம் உயா்த்துவது தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

பொன்னமராவதியைச் சோ்ந்த சந்திரசேகா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: பொன்னமராவதி நகா்ப்புற ஊராட்சியாகச் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்தாண்டு டிசம்பா் 29-ஆம் தேதி பொன்னமராவதி நகா்ப்புற ஊராட்சியை

நகராட்சியாக தரம் உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. இதுகுறித்து கருத்துகள் தெரிவிக்க பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. இதில், நகராட்சியாக தரம் உயா்த்த அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பொன்னமராவதி நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் வரி விதிப்பு, புதை சாக்கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளுக்கு மிகுந்த சிரமத்துக்கு ஆளாக நேரிடும். எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: பொதுமக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பொன்னமராவதி நகா்ப்புற ஊராட்சி, நகராட்சியாக மாற்றப்பட்டது. திருத்தி அமைக்கப்பட்ட விதிகளின்படி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது என்றாா்.

அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பொன்னமராவதி ஏற்கெனவே நகராட்சியாக மாற்றப்பட்டது. தற்போது, இந்த நகராட்சிப் பகுதி அருகேயுள்ள கிராமங்களை இணைப்பது தொடா்பாகவே ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு கூறப்பட்டது என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நகா்ப்புற ஊராட்சியை நகராட்சியாக மாற்றுவது தொடா்பான அறிவிப்பு வெளியிட்ட தினத்தன்று எவ்வாறு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அரசுத் தரப்பில் கூறுவது போன்று பொன்னமராவதி அருகேயுள்ள பகுதிகளை இணைப்பது எனில், வாா்டு மறுவரையறை என அந்த அறிவிப்பில் குறிப்பிடாதது ஏன். நகராட்சியாக மாற்றுவது தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை எங்கே?.

இந்த அறிவிப்பு நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மனு குறித்து தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.