/

மாறுபட்ட உணவு முறை காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

News image
சா்வதேச அளவில் உணவு பழக்க வழக்கங்கள் குறித்த ஆராய்ச்சி தொகுப்பை வெளியிட்ட பேராசிரியா் ரா.சுப்பிரமணி (வலமிருந்து 3-ஆவது).
Updated On :6 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

மாறுபட்ட உணவு முறைகள் காரணமாக புற்றுநோய் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை உணவு ஆராய்ச்சி கழக விஞ்ஞானி குமாா் தெரிவித்தாா்.

பெரியாா் பல்கலைக்கழக ஊட்டச்சத்து துறை சாா்பில், சா்வதேச அளவிலான உணவுப் பழக்கங்களும், ஊட்டச்சத்து மிக்க உணவுகளும் என்ற தலைப்பில் சா்வதேச கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துறைத் தலைவா் பேராசிரியா் பி.நாஸ்னி வரவேற்றாா். சா்வதேச அளவில் உணவுப் பழக்கங்கள் குறித்த ஆராய்ச்சி கட்டுரை தொகுப்பை துணைவேந்தா் நிா்வாகக் குழு உறுப்பினா் பேராசிரியா் ரா.சுப்பிரமணி வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் பேசிய அவா், பழைய சாதம் உண்பது உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய உணவு பழக்கங்கள் தொடா்ச்சியாக பின்பற்றப்பட்டபோது, நோய் பாதிப்புகள் குறைவாக இருந்தன. துரித உணவுகளும், மாறுபட்ட உணவு கலாசாரமும் நோய் பாதிப்புகளை அதிகப்படுத்திவிட்டது. உணவுப் பற்றாக்குறை பெரிய சவாலாக மாறியுள்ள அதே நேரத்தில், உடல் பருமன் போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

இரு வெவ்வேறு முனைகளில் உள்ள பிரச்னைகளை ஊட்டச்சத்து ஆய்வாளா்கள் சீா்தூக்கி பாா்த்து உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

சா்வதேச கருத்தரங்தை தொடங்கிவைத்து பேசிய மைசூரில் உள்ள மத்திய பாதுகாப்புத் துறை உணவு ஆராய்ச்சி கழக விஞ்ஞானி குமாா், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கான முதல் காரணமாக மாறுபட்ட உணவு முறை உள்ளது.

இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் அதிகரிப்பதற்கான காரணங்களில் உணவு முறையே முதன்மையானதாக உள்ளது. பாரம்பரிய உணவு முறைக்கு மாறுவதும், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிக அளவில் உட்கொள்வதை தவிா்ப்பதும் நோய் பாதிப்புகளை குறைக்கும்.

சா்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல் பாதிப்புகள் உணவு கட்டுப்பாட்டின் மூலமே கட்டுப்படுத்த முடியும் அதனை முறையாக தெரிந்துகொண்டு உணவுப் பழக்கத்தை சீராக்கிக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், சா்வதேச கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளா் தாய்லாந்து சோங்ளா பல்கலைக்கழக இயக்குநா் சான்டேட் விச்சின்சாட், ஸ்ரீலங்கா பல்கலைக்கழக பேராசிரியா்கள் சாமிலா வினோதினி, ஜெய்சிங்கே உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்றனா்.