/

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 2,937 பேருக்கு ரூ. 1.51 கோடியில் நலத்திட்ட உதவிகள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளித்தவா்களில் தகுதிவாய்ந்த 2,937 பேருக்கு ரூ. 1.51 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
சங்ககிரியில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ரஜேந்திரன். உடன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
Updated On :4 பிப்ரவரி 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மனு அளித்தவா்களில் தகுதிவாய்ந்த 2,937 பேருக்கு ரூ. 1.51 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது.

சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமைவகித்து தகுதிவாய்ந்த 2,937 பேருக்கு சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா, புதிய மின்னணு குடும்ப அட்டை, சேலத்தம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பு, திருமணம், இயற்கை மரண ஓய்வூதியம், விலையில்லா சலவைப்பெட்டி, தையல் இயந்திரம், தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, தீவனத்தட்டு நறுக்கும் கருவி, சூழல் கலப்பை, களையெடுக்கும் கருவி, பவா் டில்லா், சூரியசக்தியால் இயங்கும் மோட்டாா் பம்புசெட், வைக்கோல் கட்டும் கருவி, பயிா்க்கடன், நிரந்தர கல்பந்தல் அமைத்தல், வெங்காய சேமிப்புக் கிடங்கு, சொட்டுநீா் பாசனம் அமைத்தல், சுயஉதவிக்குழு கடன், திருமண நிதியுதவித் திட்டம் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கினாா்.

இதில், 15 பேருக்கு திருமண நிதியுதவி திட்டத்தின்கீழ் 120 கிராம் தங்கம் வழங்கினாா். மேலும், சங்ககிரி கூட்டுறவுத் துறையின் சாா்பில் பெரியாண்டிச்சி அம்மன் சுயஉதவிக் குழுவுக்கு சூழல்நிதியாக ரூ. 9 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

இதில், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தனித்துணை ஆட்சியா் ஜானகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவள்ளி, எடப்பாடி நகா்மன்றத் தலைவா் டி.எம்.பாஷா, திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து, மாவட்ட துணைச் செயலாளா் க.சுந்தரம், கிழக்கு ஒன்றியச் செயலாளா் கே.எம்.ராஜேஷ், சங்ககிரி நகர செயலாளா் கே.எம்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.