வாழப்பாடி பகுதி கிராமங்களில் பறையடிக்கும் கூலித் தொழிலாளியான தோட்டிக்கும், பாம்பாட்டிக்கும் கோயில் வளாகத்தில் சிலை வைத்து வழிபாடு நடத்திவரும் கிராம மக்கள், தீண்டாமை ஒழிப்பில் மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் இன்றளவும் பழைமை மாறாமல் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களையும், வினோத வழிபாட்டு முறைகளையும் கைவிடாமல் முன்னோர்கள் வழியாக தொடர்ந்து வருகின்றனர்.
எடுத்துக்காட்டாக, பேளூர் மற்றும் வாழப்பாடி திரெளபதியம்மன் கோயில்களில் மகாபாரத கதையை தத்ரூபமாக சித்திரிக்கும் திருவிழா, சோமம்பட்டி கிராமத்தில் இரவில் தேரோட்டம், மன்னாயக்கன்பட்டி கிராமத்தில் கோயில் காளையை அலங்கரித்து சக்தி அழைத்தல், மரச்சிற்பங்களை விருந்துக்கு அழைத்துச் செல்லுதல் ஆகியவற்றையும், கர்ப்பிணிப் பெண்களின் நினைவாக சுமை தாங்கி கற்கள் அமைத்தல் ஆகியவற்றையும் குறிப்பிடலாம்.
அவற்றையெல்லாம் விஞ்சும் வகையில், வாழப்பாடி பகுதி கிராமங்களில் தோட்டி என அழைக்கப்படும் பறையடிக்கும் கூலித் தொழிலாளிக்கும், பாம்பாட்டிக்கும், குடுகுடுப்பை அடித்து குறி சொல்லி பிழைப்பு நடத்தும் நாடோடிகளுக்கும், அப் பகுதி மக்கள் குல தெய்வமாகக் கருதி வழிபடும் கருப்பணார், மதுரை வீரன், அய்யனாரப்பன், முனியப்பன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் கோயில் வளாகத்தில் சிலை வைத்து, அந்தச் சிலைகளைப் பராமரித்து வருவதோடு, கடவுளாகக் கருதி இன்றளவும் வழிபட்டு வருவது வியக்கவைக்கும் தகவலாகும்.
வாழப்பாடி கிழக்குக்காடு கருப்பணார் கோயில், அத்தனூர்பட்டி, பொன்னாரம்பட்டி அய்யனார் கோயில், மத்தூர் மதுரை வீரன் கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களில் பறையடிக்கும் தொழிலாளி, பாம்பாட்டி, குடுகுடுப்பைக்காரருக்கும் சிலை வைக்கப்பட்டுள்ளது.
அந்த சிலைகளுக்கு ஆண்டுதோறும் வர்ணம் தீட்டி, புதுப்பித்து பராமரித்து வருவதோடு, குல தெய்வத்துக்கு விழா எடுக்கும் போது அந்த சிலைகளையும் கடவுளாகக் கருதி அப் பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
தாழ்த்தப்பட்ட இனத்தவரை கோயிலுக்குள் அனுமதிக்கவே மறுக்கும் நிலை முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், அவர்களுக்கு கோயில் வளாகத்தில் சிலை வைத்து வழிபாடு நடத்தி வரும் வாழப்பாடி பகுதி மக்கள், தீண்டாமை ஒழிப்பில் மற்ற கிராமங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.