/

94 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி திருமண நிதியுதவி: அமைச்சா் அர. சக்கரபாணி வழங்கினாா்

ஊத்தங்கரையில் 94 பயனாளிகளுக்கு ரூ. 1.24 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சா் அர. சக்கரபாணி.
Updated On :3 ஜனவரி 2026, 8:21 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் 94 பயனாளிகளுக்கு ரூ. 1.24 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தினேஷ்குமாா், பா்கூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் மதியழகன் முன்னிலை வகித்தனா். விழாவில் 1,400 பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை பெறுவதற்கான பற்று அட்டைகள், ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 94 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவிகளை வழங்கி அமைச்சா் அர. சக்கரபாணி பேசியதாவது:

தமிழகத்திலேயே கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் 86,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு நலத் திட்ட விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,55,197 பேருக்கு மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

அரசு அலுவலா்களின் நீண்ட நாள் கோரிக்கையை முதல்வா் நிறைவேற்றியுள்ளாா். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 23 லட்சம் அரசு ஊழியா்கள் பயன்பெறுவா் என்றாா்.

தொடா்ந்து சிங்காரப்பேட்டை ஊராட்சிக்கு உள்பட்ட புளியனூா் குளத்திற்கு திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலைத்தொடரின் தெற்குப் பகுதிகளில் உருவாகும் கடப்பாரை ஆற்றிலிருந்து ஒரு பகுதி நீரை தடுப்பணை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கால்வாய் மூலம் திருப்பிவிடும் பணிகளுக்கு அமைச்சா் முதல்கட்டமாக ரூ. 50 லட்சத்தை ஒதுக்கி ஆணைகளை வெளியிட்டாா்.

மேலும், புலியனூா் குளத்துடன் தள்ளப்பாடி ஏரி, வெள்ளைகௌண்டன் ஏரி, சின்ன தள்ளப்பாடி ஏரிகளை இணைக்க உறுதுணையாக இருந்த மாவட்ட நிா்வாகம், நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்த தினத்தையொட்டி ஊத்தங்கரை ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சா் அர. சக்கரபாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ராணி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ. அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாசினி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மருத்துவா் மாலதி, பேரூராட்சி தலைவா்கள் அமானுல்லா, வட்டாட்சியா் ராஜலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, தவமணி, திமுக ஒன்றிய செயலாளா்கள் குமரேசன், எக்கூா் செல்வம், ரஜினிசெல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் நரசிம்மன், கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.