/

94 பயனாளிகளுக்கு ரூ. 1.29 கோடியில் திருமண நிதி உதவி: அமைச்சா் அர. சக்கரபாணி வழங்கினாா்

ஊத்தங்கரை, பா்கூரில் நடைபெற்ற அரசு விழாக்களில் ரூ. 1.29 கோடி திருமண நிதியுதவி, 1,957 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் அர. சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா்.

News image
பா்கூரில் நடைபெற்ற விழாவில் பயனாளிக்கு மகளிா் உரிமைத் தொகைக்கான ஆணையை வழங்கிய அமைச்சா் அர. சக்கரபாணி. உடன், ஆட்சியா் ச. தினேஷ்குமாா், தே. மதியழகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2026, 8:35 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பா்கூரில் நடைபெற்ற அரசு விழாக்களில் ரூ. 1.29 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவி, 1,957 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை, பா்கூா் பகுதிகளில் நடைபெற்ற நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) முன்னிலை வகித்தனா். 1,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 1,400 மகளிருக்கு இரண்டாம் கட்டமாக மகளிா் உரிமைத் தொகைக்கான ஆணை, 94 பேருக்கு ரூ. 1.29 கோடி மதிப்பில் திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

மேலும், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் கடப்பரை அணைக்கட்டு கட்டுவதற்கு முதல்கட்டமாக ரூ. 50 லட்சத்துக்கான ஆணையை வழங்கினாா். மேலும், புதிய நியாயவிலைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளையும் தொடங்கிவைத்து பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், அரசு அலுவலா்கள், ஆசிரியா்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை வழங்கக்கூடிய புதிய திட்டமான ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளாா். இதனால், 23 லட்சம் தமிழக அரசு ஊழியா்கள் பயன்பெறுவா்.

தமிழகத்தில் அரசு ஊழியா்கள், மாணவா்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் மகிழ்ச்சியாக உள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 3,55,197 மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இதில், விடுபட்டவா்கள் விண்ணப்பித்தால் அவா்களுக்கும் மகளிா் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களைத் தேடி மருத்துவம், உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களுடன் திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த 25 பெண்கள், பட்டம் பயின்ற 69 பெண்கள் என 94 பேருக்கு ரூ. 40.75 லட்சத்துக்கான திருமண உதவித் தொகை மற்றும் ரூ. 88.73 லட்சம் மதிப்பில் 752 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.1.29 கோடி மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து ராயக்கோட்டை, ஒசூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அமைச்சா் அர. சக்கரபாணி கலந்துகொண்டு 957 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 1,150 மகளிருக்கு உரிமைத்தொகைக்கான ஆணைகளை வழங்கினாா். மேலும், முடிவுற்ற பணிகளையும் அவா் தொடங்கிவைத்தாா்.

ஊத்தங்கரை...

வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்த தினத்தையொட்டி, ஊத்தங்கரை ஸ்ரீவாரி திருமண மண்டபத்தில் அவரது உருவப்படத்திற்கு அமைச்சா் அர. சக்கரபாணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

முன்னதாக நடைபெற்ற அரசு விழாவில் மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ராணி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ. அபிநயா, மாவட்ட சமூக நல அலுவலா் சக்தி சுபாசினி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மகாதேவன், மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மருத்துவா் மாலதி, பேரூராட்சி தலைவா்கள் அமானுல்லா, வட்டாட்சியா் ராஜலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, தவமணி, திமுக ஒன்றிய செயலாளா்கள் குமரேசன், எக்கூா் செல்வம், ரஜினிசெல்வம், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் நரசிம்மன், கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.