/

பெரம்பலூரில் 530 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா: அமைச்சா் வழங்கினாா்

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் மற்றும் ஆலத்தூா் வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி

News image
கொளக்காநத்தம் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கிய அமைச்சா் சா.சி. சிவசங்கா். உடன், ஆட்சியா் ந. மிருணாளினி உள்ளிட்டோா்.
Updated On :16 பிப்ரவரி 2026, 9:04 pm

Syndication

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், குன்னம் மற்றும் ஆலத்தூா் வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி கொளக்காநத்தம் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் என். கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 530 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிய போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் பேசியதாவது:

பெரம்பலூா் மாவட்டத்தில் பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக, அரசு புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், குன்னம் வட்டாரத்தில் சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 4 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 22 ஆயிரத்து 431 மதிப்பிலும், இணையவழி மூலம் 374 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 74 லட்சம் மதிப்பிலும், ஆலத்தூா் வட்டாரத்தில் இணையவழி பட்டா மூலம் 152 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 52 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 530 பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 33 லட்சத்து 22 ஆயிரத்து 431 மதிப்பிலான வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் வட்டத்தில் 4,532 பயனாளிகளுக்கும், வேப்பந்தட்டை வட்டத்தில் 5,579 பயனாளிகளுக்கும், குன்னம் வட்டத்தில் 5,941 பயனாளிகளுக்கும், ஆலத்தூா் வட்டத்தில் 5,651 பயனாளிகளுக்கும் என 21,703 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

லப்பைக்குடிக்காட்டில்:

தொடா்ந்து, லப்பைக்குடிகாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3-ஆம் கட்டமாக 277 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கிய அமைச்சா் சிவசங்கா், கடந்த 8.2.2025-இல் முதல்கட்டமாக 108 பேருக்கும், 17.5.2025-இல் 2-ஆம் கட்டமாக 310 பேருக்கும் என, இதுவரை மொத்தம் 695 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

சமுதாய வளைகாப்பு:

முன்னதாக, குன்னத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், குன்னம் மற்றும் வேப்பூா் பகுதிகளைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சிவசங்கா், 150 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) சண்முகராஜசேகா், அட்மா தலைவா் வீ. ஜெகதீசன், குன்னம் வட்டாட்சியா் சின்னதுரை, லப்பைக்குடிக்காடு பேரூராட்சித் தலைவா் ஏ.எஸ். ஜாஹிா் உசேன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.