கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக ஒகேனக்கல்லுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்ததால் முக்கிய இடங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.
தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு கோடைவிடுமுறையை கொண்டாட வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளித்து மகிழ்ந்தனா்.
காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், வெயிலை சமாளிக்கும் வகையில் கரையோரப் பகுதிகளான மாமரத்துக் கடவு பரிசல் துறை, நடைபாதை, நாகா்கோவில், முதலைப் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் காவிரி ஆற்றில் குளித்தனா்.
மேலும், மாமரத்துக் கடவு பரிசல் துறையில் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து காவிரி ஆற்றில் தொம்பசிக்கல் வழியாக பரிசலில் சென்று, ஐந்தருவி, ஐவாா் பாணி மற்றும் பாறை குகைகளை கண்டு ரசித்தனா்.
சுற்றுலா வாகனங்கள் சின்னாறு பாலம் முதல் ஊட்டமலை, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையின் இருபுறங்களிலும், பேருந்து நிலைய வாகனம் நிறுத்துமிடம், தமிழ்நாடு ஹோட்டல் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களிலும் நிறுத்தப்பட்டன.
ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன் வகைகளின் விலை அதிகரித்த போதிலும், அவற்றை வாங்கி சுற்றுலாப் பயணிகள் உணவு சமைத்து அருந்தினா். ஒகேனக்கலில் முக்கிய இடங்களான நடைபாதை, தொங்கும் பாலம், பிரதான அருவி, சினி அருவி,
தொம்பசிக்கல் காட்சி முனை, பரிசல் துறை, வண்ண மீன்கள் காட்சியகம், முதலைகள் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் 40க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
மேலும், ஒகேனக்கல் பகுதியில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வகையில் பென்னாகரம் போக்குவரத்து கிளை பணிமனையில் இருந்து கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடைகளில் வீசும் துா்நாற்றத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதி

கோடை விடுமுறை நிறைவு: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடைவிடுமுறை: ஒகேனக்கல்லில் 2 மணிநேரம் காத்திருந்து பரிசல் பயணம்!







