டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தருமபுரியில் அனைத்து பேருந்துகளையும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வலியுறுத்தல்

தருமபுரியில் பொதுமக்களின் சிரமங்களை களையும் வகையில், அனைத்து வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தல்

News image
தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்திடம் கோரிக்கை மனு அளித்த தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன்
Updated On :20 பிப்ரவரி 2026, 10:44 pm

Syndication

தருமபுரியில் பொதுமக்களின் சிரமங்களை களையும் வகையில், அனைத்து வழித்தடங்களில் இயங்கும் பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தமிழக தலைமைச் செயலா் நா.முருகானந்தத்திடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு: தருமபுரி புதிய புகா் பேருந்து நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதனால், குழப்பம் மற்றும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், தருமபுரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மாவட்ட தலைநகரம் என்ற வகையில், ஆட்சியா் அலுவலகம், காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், அரசு கலைக் கல்லூரி, நலவாழ்வுத் துறையின் அலுவலகங்கள், போக்குவரத்துத் துறை அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகம் போன்ற மக்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் வந்துசெல்லும் அலுவலகங்கள், பழைய தருமபுரி - சேலம் சாலையில் உள்ளன. மேலும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இச்சாலையில் அமைந்துள்ளது.

பேருந்து நிலைய இடமாற்றத்தால், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு அலுவலகங்களுக்கும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் செல்லும் பொதுமக்கள் புதிய பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ அல்லது நகர பேருந்துகள் மூலம் நான்கு வழிச்சாலை சந்திப்புக்கு வந்து, மீண்டும் அங்கிருந்து மற்றொரு ஆட்டோ அல்லது நகர பேருந்தில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த மாற்றத்தால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள், அவற்றுக்கான தீா்வு, பேருந்து நிலைய மாற்றத்துக்கு முன் செய்ய வேண்டியது என்ன போன்ற ஆய்வுகள் செய்திருக்க வேண்டும். இத்தகைய ஆய்வுகள் ஏதும் செய்யாமலேயே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் இன்னல்களை களையும் வகையில், உடனடியாக, தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகளும், அருகிலுள்ள மாவட்டங்களான கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூா், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் முன்பு போலவே பழைய புகா் பேருந்து நிலையத்துக்கு வரவேண்டும்.

புதிய பேருந்து நிலையத்தை வெளி மாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்லும் விரைவுப் பேருந்து நிலையமாக பயன்படுத்த வேண்டும்.

பழைய புகா் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை ஏலம் எடுத்து வாடகை செலுத்திவரும் வணிகா்கள், சிறு தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு வணிக நிறுவனத்தினா் கடந்த 15 நாள்களாக வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்கும், வணிகப் பெருமக்களின் வாழ்வாதாரத்துக்கும் உதவும் வகையில், பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நிரந்தரமாக மீண்டும் இயக்கவும், பழைய பேருந்து நிலையத்தை முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.