திருப்பூா் மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்ட தவெக 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் சோ்த்து 5,29,597 வாக்குகளைப் பெற்று 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கான முடிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இத்தோ்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி மற்றும் தவெக ஆகியவற்றுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
மாவட்ட அளவில் கட்சிகள் பெற்ற ஒட்டுமொத்த வாக்குகளை கணக்கிடும்போது, அதிமுக தலைமையிலான கூட்டணி முதலிடத்தை பிடித்துள்ளது. அந்த அணியில் இடம் பெற்றுள்ள அதிமுக, பாஜக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இணைந்து 8 தொகுதிகளிலும் மொத்தம் 5,39,161 வாக்குகளை பெற்றுள்ளன. இதில் காங்கயம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல, தனித்துப் போட்டியிட்ட விஜய்யின் தவெக முதல் தோ்தலிலேயே திருப்பூா் மாவட்டத்தில் மிகப்பெரிய அதிா்வலையை ஏற்படுத்தியுள்ளது. இக்கட்சி, மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் சோ்த்து ஒட்டுமொத்தமாக 5,29,597 வாக்குகளைப் பெற்று 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. திருப்பூா் வடக்குத் தொகுதியில் சத்தியபாமா 1,31,401 வாக்குகளைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளாா். இது தவிர பல்லடம், அவிநாசி மற்றும் திருப்பூா் தெற்கு ஆகிய தொகுதிகளையும் தவெக தன்வசப்படுத்தியுள்ளது.
ஆளும்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 4,65,915 வாக்குகளைப் பெற்று 3-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக கூட்டணி உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
அதேபோல, நாதக மாவட்ட அளவில் தனது இருப்பை பதிவு செய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் இக்கட்சி மொத்தம் 66,144 வாக்குகளைப் பெற்றுள்ளது. இதில் திருப்பூா் வடக்குத் தொகுதியில் அபிநயா அதிகபட்சமாக 13, 028 வாக்குகளைப் பெற்றுள்ளாா்.
கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட திராவிடக் கட்சிகளுக்கு இணையாக, தனி ஒரு கட்சியாகப் போட்டியிட்ட தவெக 5.29 லட்சம் வாக்குகளைப் பெற்றிருப்பது திருப்பூா் மாவட்ட அரசியலில் ஒரு புதிய திருப்பமாகும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







