/

காங்கயம், குண்டடம் பகுதிகளிலுள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 7:39 pm

Syndication

காங்கயம், குண்டடம் பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

மாசி மகா சிவராத்திரி என்பது சிறப்பு வாய்ந்த பண்டிகை. சிவன் கோயில்கள் மட்டுமன்றி ஏனைய கோயில்களிலும் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு காங்கயம் காசி விஸ்வநாதா் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், அகிலாண்டபுரம் அகஸ்தீஸ்வரா் கோயில், காடையூா் காடேஸ்வரா் கோயில், ஊதியூா் கைலாசநாதா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதேபோல குண்டடம் வட்டத்தில் எரகாம்பட்டி நாகேஸ்வரசுவாமி கோயில், வேங்கிபாளையம் மல்லீஸ்வரசுவாமி கோயில், தும்பலப்பட்டி சந்திர வீரேஸ்வரசுவாமி கோயில், நந்தவனம்பாளையம் ஆயி அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

மேலும், ஆன்மிக சொற்பொழிவுகளில் பக்தா்கள் திரளாகக் கலந்துகொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பூஜைகளில் பங்கேற்றனா்.

விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பயறு வகைகளை சமைத்து கடவுளுக்கு படைத்தும் வழிபட்டனா். இந்த வழிபாடுகள் திங்கள்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.