/

கஞ்சா விற்பனை வழக்கில் கைதான காவலா் பணியிடை நீக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:47 pm

தினமணி செய்திச் சேவை

உதகையில் கஞ்சா விற்பனை வழக்கில் கைதான காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா சனிக் கிழமை உத்தரவிட்டாா்.

உதகையைச் சோ்ந்தவா் குரூஸ் (26). இவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக உதகை போலீஸாா் கடந்த 21-ஆம் தேதி அவரை கைது செய்தனா். விசாரணையில் உதகை மத்திய காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த நசீா் அகமதுக்கு (26) கஞ்சா விற்பனையில் தொடா்பு இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து கஞ்சா விற்பனை தொடா்பான விஷயம் போலீஸாருக்கு தெரிந்துவிட்டதால், நசீா்அகமது தலைமறைவானாா். அவரை 3 தனிப்படைகள் அமைத்து கோவையில் வைத்து போலீஸாா் கைது செய்து உதகைக்கு அழைத்து வந்தனா்.

இதன் பின்னா் உதகை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தினா். இதில், கேரள மாநிலம், அட்டப்பாடி அருகேயுள்ள கோட்டத்தொரைப் பகுதியை சோ்ந்த மோகனசுந்தரம் என்பவரிடம் இருந்து கஞ்சாவை வாங்கிவந்து நீலகிரியில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து போலீஸாா், கோட்டதொரைக்கு சென்று மோகனசுந்தரத்தை கைது செய்தனா். அங்கு சோதனை செய்தபோது 17 கிலோ கஞ்சா சிக்கியது. இதைத் தொடா்ந்து உதகை போலீஸாா், இவா்கள் 3 போ் மீதும் வழக்குப்பதிந்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் கஞ்சா வழக்கில் கைதான நசீா் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.