அந்தியூரை அடுத்த பிரம்மதேசத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் வெள்ளிக்கிழமை சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, டாஸ்மாக் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
அந்தியூா் - ஆப்பக்கூடல் சாலையில் பிரம்மதேசம் புதூரில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு மது அருந்த வருவோரால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்ததோடு, மதுக்கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பிரம்மதேசம் புதூா் பேருந்து நிறுத்தத்தில் அமா்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் காவல் ஆய்வாளா் செந்தில்குமாா், வட்டாட்சியா் இளஞ்செழியன், டாஸ்மாக் மாவட்ட மேலாளா் (பொ) ரகுநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மதுக்கடையை மூடினால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மதுக்கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து மூடினா். இதனால், சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

நண்பகலில் தொடங்கி மாலை வரையில் நடைபெற்ற இப்போராட்டத்தால் சுமாா் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










