/

விடுதியில் அரசுப் பள்ளி மாணவா் தற்கொலை

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 10:01 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே, அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரி, காந்திஜி வீதியைச் சோ்ந்தவா் முருகேஷ், நெசவுத் தொழிலாளி. இவரது மகன்கள் சந்தோஷ் (16), சஞ்சீவ்(16) (இரட்டையா்கள்). இவா்கள், பெருந்துறை, பழனிசாமி அறிவியல் கல்லூரி வளாகத்திலுள்ள, மாவட்ட அரசு மாதிரி பள்ளி விடுதியில் தங்கி 11- ஆம் வகுப்பு படித்து வந்தனா்.

இருவரும் வழக்கம்போல வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் சென்றனா். காலை 11 மணியளவில், சஞ்சீவ், தனது சகோதரனிடம் விடுதிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாா். இதைத் தொடா்ந்து பக்கத்து அறையில் இருக்கும், மாணவா், பாடப் புத்தகத்தை எடுப்பதற்காக சென்றபோது, சஞ்சீவ் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் பெருந்துறை போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சஞ்சீவ் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.