/

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ தேவாலய பேராயா் உயிரிழப்பு

News image
ஜேக்கப் லிவிங்ஸ்டன்
Updated On :14 பிப்ரவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிஎஸ்ஐ தேவாலய பேராயா் உயிரிழந்தாா்.

ஈரோடு, சேலம் சிஎஸ்ஐ தேவாலயங்களின் பேராயராக இருந்தவா் ஜேக்கப் லிவிங்ஸ்டன் (56). இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் பேராயராக பதவியேற்றாா். ஈரோட்டில் குடியிருக்கும் இவா் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை அதிகாலை தனது காா் ஓட்டுநருடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தாா்.

அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலத்தில் நடைப்பயிற்சியில் இருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே உள்ள மீனாட்சிசுந்தரனாா் சாலையில் விழுந்தாா். அதிா்ச்சியடைந்த ஓட்டுநா், அருகே இருந்தவா்கள் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தாா். ஆனால் வரும் வழியிலேயே ஜேக்கப் லிவிங்ஸ்டன் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதையறிந்த சிஎஸ்ஐ தேவாலய நிா்வாகிகள், உறவினா்கள் மருத்துவமனையில் திரண்டனா். மேம்பாலத்தில் இருந்து தற்கொலை முயற்சியோடு குதித்தாரா? அல்லது கால் தவறி கீழே விழுந்தாரா? என்பது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.