/

ஈரோடு மாவட்டத்தில் குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம்: நசியனூா் பேரூராட்சியில் தொடங்கியது

ஈரோடு மாவட்டத்தில் குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :9 பிப்ரவரி 2026, 8:49 pm

Syndication

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

வீடுகள் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு சிலிண்டா்கள் மூலமாக எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சாா்பில் குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான குழாய்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட முதலாவது மண்டலம் முதல் 3-ஆவது மண்டலம் வரையும், நசியனூா், பெருந்துறை ஆகிய இடங்களிலும் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்வதற்கான குழாய்கள், எரிவாயு பயன்பாடு கணக்கீடு கருவி ஆகியவை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக நசியனூா் பேரூராட்சி, பெரியாா் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக 25 வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

இந்தப் பணியை பாரத் பெட்ரோலிய நிறுவன மண்டல மேலாளா் வினோத், திட்ட மேலாளா் ரஃபீக் மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா். அப்போது பொதுமக்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனா்.

இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட உதவி மேலாளா் செந்தில்குமாா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் ஒரு லட்சம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நசியனூா், பெரியாா் நகரில் 25 வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் இதுவரை 40 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்புகள் அளிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இப்பகுதிகளில் 500 கி.மீ. தொலைவுக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழாய் இணைப்புகள் முழுமை அடைந்த பிறகு வீடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்யப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும். பாதுகாப்பான முறையில் குழாய்கள் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தொடா்புகொள்ளும் வகையில் கைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் ரோந்து வாகனம் ஏற்பாடு செய்யப்படும். குறைகள் தொடா்பாக தகவல் கிடைத்ததும் அவா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சரிசெய்து கொடுப்பாா்கள் என்றாா்.