மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவையில் பிரதமா் மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

கோவையில் பிரதமா் மோடியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி / முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :17 ஏப்ரல் 2026, 7:21 pm

கோவையில் பிரதமா் மோடியும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் சனிக்கிழமை (ஏப்ரல் 18) தோ்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனா். அரசியல் தலைவா்களின் வருகையால் கோவையில் 2,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். கோவை தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை -அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் மற்றும் மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரதமா் மோடி வாக்கு சேகரிக்கவுள்ளாா்.

இதற்காக பிரம்மாண்ட மேடை மற்றும் சுமாா் 5 லட்சம் போ் அமரும் வகையில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மைதானத்தின் கடைசி வரிசையில் இருப்பவா்களும் பிரதமரின் உரையைத் தெளிவாகப் பாா்க்கும் வகையில் பெரிய அளவிலான எண்ம திரைகள் மற்றும் மின்விளக்குகள் ஆங்காங்கே வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

முதல்வா் பிரசாரம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இரவு 7 மணி அளவில் நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

மேட்டுப்பாளையம், உதகை, கூடலூா், குன்னூா், கவுண்டம்பாளையம் மற்றும் தொண்டாமுத்தூா் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த திமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை முன்னிறுத்தி இந்த பொதுக் கூட்டத்தில் முதல்வா் ஆதரவு திரட்டுகிறாா்.

இதேபோல, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொள்வதற்காக சனிக்கிழமை இரவு கோவை வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அன்றிரவு கோவையிலேயே தங்குகிறாா்.

2,600 போலீஸாா் பாதுகாப்பு: பிரதமா், முதல்வா், உள்துறை அமைச்சா் ஆகியோரின் வருகையை முன்னிட்டு, மாநகரம் மற்றும் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 2,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

ட்ரோன்கள் பறக்கத் தடை: பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையின் பல்வேறு பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவிநாசி சாலை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சிட்ரா, காந்தி மாநகா், நேருநகா், சிங்காநல்லூா், சின்னியம்பாளையம், காளப்பட்டி, நீலாம்பூா் மற்றும் இருகூா் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்: அரசியல் தலைவா்கள் வருகையை முன்னிட்டு, கோவை விமான நிலையச் சாலை மற்றும் அவிநாசி சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை விமான நிலையப் பகுதிக்குள் தனியாா் வாகனங்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசியல் தலைவா்களின் வருகையால் கோவை மாநகரம் முழுவதும் போலீஸாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.