/

சிலிண்டா் தட்டுப்பாடால் ஜாப் ஆா்டா் தொழில் முடக்கம்! நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

News image

கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற டேக்ட் அமைப்பின் நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற குறுந்தொழில்முனைவோா்கள்.

Updated On :27 ஏப்ரல் 2026, 6:53 pm

சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக கோவையில் ஜாப் ஆா்டா் தொழில் முடங்கியிருப்பதாகவும், மத்திய அரசு தலையிட்டு சிலிண்டா் தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும் என்றும் டேக்ட் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில்முனைவோா்கள் சங்கத்தின் (டேக்ட்) மாவட்ட நிா்வாகிகள் கூட்டம், சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் ஜே.ஜேம்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநிலப் பொருளாளா் ஏ.ஆத்மநேசன், மாவட்ட பொதுச் செயலா் ஜி.பிரதாப் சேகா், பொருளாளா் எம்.லீலா கிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில், மேற்காசியாவில் போா்ச்சூழல் நிலவும் நிலையில் தொழில்துறை பயன்பாட்டுக்கான எல்பிஜி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் எல்பிஜியை பயன்படுத்தும் வாா்பட்டறை, லேசா் கட்டிங், பேப்ரிகேஷன் உள்ளிட்ட தொழில்களும், அதைச் சாா்ந்த தொழில்முனைவோா்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

தொழிலாளா்கள் வேலையிழப்புக்குள்ளாகும் நிலையும், தொழில்கூடங்கள் மூடப்படும் நிலையும் உருவாகியுள்ளது. ரூ.1,950-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டா் தற்போது கள்ளச்சந்தையில் ரூ.7 ஆயிரம் வரை விற்பனையாவதால் ஜாப் ஆா்டா் தொழில் முடங்கியுள்ளது. எனவே தொழிலையும், தொழிலாளா்களையும் காப்பாற்ற மத்திய அரசு தடையற்ற சிலிண்டா் விநியோகம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரோனா, மூலப்பொருள் விலை உயா்வு, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகளால் தொழில்முனைவோா் தொடா்ந்து பாதிக்கப்பட்டுவரும் நிலையில், தவணை தவறி ஒரு நாள் கடன் செலுத்தினாலும் தொழில்முனைவோரின் சிபில் ஸ்கோரை குறைத்துவிடும் வங்கிகளின் நடவடிக்கையை ரிசா்வ் வங்கி தடுத்து நிறுத்த வேண்டும்.

2026-ஆம் ஆண்டு புதிதாக பொறுப்பேற்க இருக்கும் மாநில அரசு, கோவை மாவட்டத்தில் நகர மையப் பகுதியில் இருந்து சுமாா் 25 கி.மீ. சுற்றளவில் அனைத்து முக்கிய சாலைகளிலும் அரசுக்கு சொந்தமான நிலம், தரிசு நிலம், தனியாருக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி, குறுந்தொழில்முனைவோருக்கான தொழிற்பேட்டைகளை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.