வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி அலுவலா்கள் அப்புறப்படுத்தினா்.
வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு வேலூா், திருவண்ணாமலை, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, சென்னை, விழுப்புரம், கடலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வந்து செல்கின்றன.
இதையொட்டி, புதிய பேருந்து நிலையத்துக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனா். அதேசமயம், பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் சிரமமடைந்து வருகின்றனா்.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. இதையடுத்து, மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன் உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலா் (பொறுப்பு ) வெங்கடேசன், மண்டல சுகாதார அலுவலா் முருகன் உள்ளிட்ட அலுவலா்கள் வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, வரையப்பட்டுள்ள மஞ்சள் கோடுகளுக்கு வெளியே நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இனிமேல் பேருந்து நிலைய நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்தால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.
இந்த சம்பவத்தால் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.--
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









