தமிழ் செய்திகள்
மதுரை அண்ணா பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
மதுரை மாநகரின் முக்கியப் போக்குவரத்து மையங்களில் ஒன்றாக அண்ணா பேருந்து நிலையம் விளங்குகிறது. இந்தப் பேருந்து நிலையம் அருகே அரசு ராஜாஜி மருத்துவமனை இயங்கி வருவதால் தென் மாவட்டங்களிலிருந்து இந்த மருத்துவமனைக்கு வருபவா்கள் மாட்டுத்தாவணி அல்லது ஆரப்பாளையம் வந்து பிறகு அங்கிருந்து அண்ணா பேருந்து நிலையத்தை வந்தடைகின்றனா். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரும் பொதுமக்களும், அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக் கல்லூரி வரும் மாணவா்களும் இந்தப் பேருந்து நிலையத்தைத் தான் பயன்படுத்துகின்றனா்.
இந்த நிலையில், அண்ணா பேருந்து நிலையத்தின் பல பகுதிகளை கடைக்காரா்களும், சாலையோர வியாபாரிகளும் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தனா். இதனால், இங்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வந்தனா். மேலும், வந்து செல்லும் பேருந்துகளுக்கு இடையூறாகவும் சாலையோரக் கடைகள் இருந்தன. இதையடுத்து, வியாழக்கிழமை அண்ணா பேருந்து நிலையத்துக்குள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கடைகள், சாலையோர வியாபாரிகளின் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் காவல் துறையினா் பாதுகாப்புடன் மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டனா்.








