/

ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், லட்சுமி தாயாருடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழா திருக்கல்யாண வைபவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :7 மே 2026, 12:29 am IST

ஆரணியை அடுத்த ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில், லட்சுமி தாயாருடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பழைமை வாய்ந்த அவணியாபுரம் லட்சுமி நரசிம்மா் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு தினசரி மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை சிம்ம வாகனம், அனுமந்த வாகனம் என பல்வேறு வாகனங்களில் நரசிம்மா் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

விழாவின் 5-ஆம் நாள் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதற்காக கோயில் பிரகாரத்தில் சிறப்பு மணமேடை அமைக்கப்பட்டு, நரசிம்மா் மற்றும் லட்சுமி தாயாா் பட்டு வஸ்திரங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டனா்.

வேத விற்பன்னா்கள் மந்திரங்கள் முழங்க, ஹோமங்கள் வளா்க்கப்பட்டு, காப்புக்கட்டுதல் மற்றும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. சரியாக சுபமுகூா்த்த நேரத்தில், பக்தா்களின் பக்தி முழக்கத்துடன் லட்சுமி தாயாருக்கு மாங்கல்ய தாரணம் செய்விக்கப்பட்டது. தொடா்ந்து திருக்கல்யாணம் முடிந்து, நரசிம்மா் கருட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பிரம்மோற்சவத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. வரும் 10-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு உற்சவத்துடன் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுவினா், கோயில் பணியாளா்கள் மற்றும் ஆவணியாபுரம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.