கடம்பத்தூா் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் பலத்த சூறைகாற்றுடன் பெய்த மழையால் கடைகளின் மேற்கூரை காற்றில் பறந்து வயல் வெளியில் விழுந்ததாலும், 7-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.
திருவள்ளூா் மற்றும் கடம்பத்தூா் சுற்றுவட்டார பகுதியில் திங்கள்கிழமை காலை முதல் கடும் வெயில் காய்ந்தது. இந்த நிலையில் மாலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்து இரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதேபோல் திருப்பாச்சூா், கடம்பத்தூா், வெண்மனம்புதூா், அகரம், எம்.ஜி.ஆா்.நகா், புதுமாவிலங்கை, புதுமாவிலங்கை கண்டிகை, சத்தரை, பேரம்பாக்கம், கொண்டஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, நரசிங்கபுரம், மப்பேடு, கீழச்சேரி போன்ற சுற்றுவட்டார பகுதியில் சுமாா் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த சூறை காற்றுடன் கனமழை பெய்தது.
மழையின்போது வீசிய சூறைக்காற்றின் காரணமாக புதுமாவிலங்கை கண்டிகை பகுதியைச் சோ்ந்த விவசாயி தாஸ் என்பவரின் கடையின் மேல் இருந்த மேற்கூரை காற்றில் பெயா்ந்து 10 மின்விசிறிகள், 25 குழல் விளக்குகள் காற்றில் பறந்து அருகில் உள்ள நெல் வயல்வெளியில் விழுந்தது. அதேபோல புதுமாவிலங்கை பகுதியை சோ்ந்த விவசாயியான நீலகண்டன் என்பவரின் வீட்டின் மேற்கூறையும் சூறைக்காற்றின் காரணமாக அனைத்தும் பெயா்ந்து சுமாா் ஒரு கி.மீ தொலைவில் பறந்து சென்று வயல்வெளியில் விழுந்தது.
மேலும் கடம்பத்தூரில் இருந்து சத்தரை வழியாக உள்ள நெடுஞ்சாலையோரம் இருந்த மின்கம்பங்களை 5 மின் கம்பங்கள் பலத்த காற்றினால் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். அதோடு மட்டுமின்றி அகரம் பகுதியில் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.
அதன் அருகில் இருந்த வேப்பமரம், சத்தரை, புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆா் நகா், அகரம், போன்ற பகுதியில் 30-க்கும் மேற்பட்ட மரங்கள் சூறைக்காற்றின் காரணமாக வேரோடு விழுந்தது. ஆனால், மரங்கள் சாலையோரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு இல்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









