//

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

News image
மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கிய ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா
Updated On :5 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து பொது மக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் 459 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தாா். தகுதியான மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணவும் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து சக்கர நாற்காலி கோரி மனு அளித்த காவனூா், வெங்கடாபுரத்தைச் சாா்ந்த மாற்றுத்திறனாளி சுமித்ராவுக்கு உடனடியாக மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.18,000/- மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், தனித் துணை ஆட்சியா் கீதா லட்சுமி, நோ்முக உதவியாளா் (பொது) இராஜராஜன், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அறிவுடைநம்பி, உதவி இயக்குநா்கள் (ஊராட்சி) பாரி, திரு.சீனிவாசன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் வசந்த ராமகுமாா் கலந்து கொண்டனா்.