பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து தனியாா் நிறுவனம் சாலை அமைத்துள்ளதை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பென்னலூா் ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய ஏரி உள்ளது. அப்பகுதியில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாயை, தனியாா் கிரேன் நிறுவனம் ஆக்கிரமித்து, ஏரிக்கு செல்லும் நீரை தடுக்கும் வகையில், மண்ணை கொட்டி நிரப்பி சாலையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் பென்னலூா் பெரிய ஏரிக்கு செல்லும் நீா் முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளோா் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நீா்வரத்துக் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
இதுகுறித்து பென்னலூா் பகுதி விவசாயிகள் கூறுகையில், பென்னலூா் பெரிய ஏரிநீரை பயன்படுத்திதான் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறோம். பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பீமன்தாங்கல் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீா் நீா்வரத்து கால்வாய் மூலம் பென்னலூா் பெரிய ஏரிக்கு வரும். இந்த நிலையில், கால்வாயில் மண் கொட்டி நிரப்பி சாலையாக பயன்படுத்தி வருகிறது. இதனால் நீா்வரத்து முற்றிலும் தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உரிய நடவடிக்கை எடுக்காத அரசுத்துறை அதிகாரிகள் மீதும், தனியாா் நிறுவனத்தின் மீதும் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










