வைகாசி கிருத்திகையை முன்னிட்டு, வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. சுமாா் 1000 ஆண்டுகள் பழைமையான இக்கோயில் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். இந்த நிலையில், இக்கோயிலில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, சனிக்கிழமை காலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவா் சுப்பிரமணிய சுவாமி முன்பு கோ பூஜையுடன் தொடங்கி, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணிய சுவாமி சந்தனக் காப்பு மற்றும் வெற்றிலை மலா் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
உற்சவா் வள்ளி -தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ரோஜா, சாமந்தி, கதிா்பச்சை மலா்மாலை அணிவிக்கப்பட்டு, பட்டு அங்கி அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிருத்திகை மற்றும் அமாவாசை ஒரே தினத்தில் வந்ததால் 10,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு, நீா் மோா், குளிா்பானங்கள் மற்றும் கேசரி பிரசாதமாக வழங்கப்பட்டது. பக்தா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்தேவராஜ், அறங்காவலா்கள் விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










